Wednesday, January 25, 2012

பெண்களும் ரோஜாக்களே!

தோட்டத்தில் சில ரோஜாக்கள்.

கண்ணை கவரும்
நிறமோ,
மனதை மயக்கும்
மணமோ,
அசைந்தாடும்
அழகோ,
சிலரை அங்கே
கவர்ந்திழுத்தன.

பறித்து எடுத்தனர்.
அவரவர்
பிடித்த ரோஜாவினை.

பொத்தினான், ஒருவன்
தம் கைகளினால்.
அதிகாரத்தில்.

உயர்த்தி பிடித்தான், ஒருவன்
பெருமையில்.

பத்திரப்படுத்தினான். ஒருவன்
தன் சட்டைப்பையினில்.
அளவுமீறிய பாசத்தில்.

பொத்திய கைகள்,
பிசுபிசுத்தன.
முகர்ந்தால் சகிக்க
முடியா நாற்றம்.

உயர்த்தியதன்
வாசனையினால்
கவரப்பட்டான்.
வேறொருவன். விளைவு
ரோஜா பறிபோனது.

தேகம் நோக
தைத்தது,
சட்டை பையில்.
ரோஜாவின் முள்.

பெண்களும்
ரோஜாக்களே!

Tuesday, January 24, 2012

மனிதன்

தவறுகளுக்கும்
மறதிகளுக்கும்
இடையில்
வாழ்பவனே
மனிதன்.

தன் தவறினை
திருத்துபவனும்
பிறர் தவறினை
மன்னிப்பவனும்
மனிதருள்
புனிதனாகின்றான்.

தன் தவறினை
மறந்தும், மறைத்தும்
பிறர் தவறினை
பெரிதாக்குபவன்
மனிதருள்
மிருகமாகின்றான்.

எதிர்பார்ப்புக்கள்

உறவுகள் தானே-என
உண்மையின் வழி
உரிமையுடன்
உரைக்கின்றேன்.

எதிர்பார்ப்புக்கள்
ஏமாற்றங்களாய்
என் எதிரில்
எள்ளி நகைக்கின்றன.

தவறுகள் -என
திருத்தம் செய்யின்
திருப்பி தாக்கி
திகைப்பில் ஆழ்த்தும்
திருடர்கள்.

உதவிகள்- செய்யின்
உடன் சேர்ந்து
உரிமை பாராட்டும்
உயிர்ப்பான
உறவுகள்.

பாடங்கள்
படித்து விட்டோம். இனி
பணியினை செய்வோம்
பலனை இறைவனிடம்
பெறுவோம்.

எதிர்பார்ப்புக்கள்
என்றுமே
ஏமாற்றங்களே
இவ்வுலகில்.

Friday, January 20, 2012

Circle

காணும் வரை
தேடல்
பழகும் வரை
தூண்டல்
அலுக்கும் வரை
காதல்
பின் பிரிவு வரை
ஊடல்
பிரிந்த பின்
ஏங்கல்
மீண்டும் மற்றொன்றை
காணும் வரை
தேடல்.
இது எமது
இளைஞர்களின்
சுற்று வட்டம்.
எப்போது முடிவு?

university

university என்பதன் தற்கால நடைமுறைக்கு ஏற்ற கருத்து யாது?
1) பல் களை கழகம்
2) பல் கொலை கழகம்
3) பல் கலை கலகம்
4) சல் கலை கழகம்
5) கொல் கலை கழகம்
6) பல் தொல்லை கழகம்

Wednesday, January 18, 2012

The girl

சிமிட்டும்-மான்
விழிகள்
உணர்த்தும்-உயிர்
வலிகள்.

சிந்தும்-கண்ணீர்
துளிகள்
பேடிகளாய் மாற்றும்
வழிகள்.

மயக்கும்-பாச
வரிகள்
அடைக்கும்-சிறை
கம்பிகள்.

வதைக்கும்-சிறு
சிரிப்புகள்
உணர்வை இழக்கும்
மந்திரங்கள்.

சொரியும்-கொஞ்சல்
மொழிகள்
வளரும்-நஞ்சு
விதைகள்.

காட்டும்-நலிவு
சுழிவுகள்
புதையும்-புதை
குழிகள்.

ஆக மொத்தம்,
பெண் - ஒரு
சோதனை.
வெல்வோர்- படைப்பர்
சாதனை
தோற்போர்- படுவர்
வேதனை.

Monday, January 16, 2012

goal?

மனிதனே!
உன் எதிர்பார்ப்பு,
இலட்சியம்,
கனவு, இலக்கு என
நீ வரையறுப்பது எவற்றை?

நீண்ட நெடிய
முடிவில்லாத
நோயற்ற
முதுமையற்ற
மாற்றமற்ற
என்றும் இளமையாக
அழகாக
மனதிற்கு பிடித்த
(துணை,
இருப்பிடம்,
வாகனம்,
உறவினர்,
சந்ததிகள்,
பணியாளர்கள்,
நண்பர்) உடன்
கூடிய தாம் விரும்பிய
உணவு, உடை, தொழில்
கொண்ட சந்தோசமான
பூரணமான வாழ்க்கை.

இவை அனைத்தும் கொண்ட
மனிதனை
எங்கேயாவது
காண முடியுமா?
அனைத்தினையும்
அடைய பேராசை
பட்டு நிம்மதியற்று
தவித்து இவ்வுலகில்
பூரணப்படுத்தவே முடியாத
இந்த இலக்குகளிற்காக
வாழ்வதை விட,
மறுமையில்
இலகுவில்
இந்த அனைத்து
இலக்குகளையும்
அடைவதற்காக
இவ்வுலகில்
மேற்குறிப்பிட்ட
வளங்களினை
நிதானமாக
பொறுமையாக
சரியான வழியில்
பயன்படுத்த முயற்சிப்போமா?

Friday, January 6, 2012

mother

இன்பத்தினை
கருவாக்கி
உதிரத்தினை
பாலாக்கி
பாசத்தினை
அமுதூட்டி
வலி தாங்கி
விழி விரித்து
நோய் நீங்க
நோன்பிருந்து
அன்பாக
அரவணைத்து
பண்பான
பாடலிசைத்து
சிறு சிரிப்பினில்
சுவர்க்க சுகம் கண்டு
காற்றும் தீண்டா
அரண் அமைத்து
அழுக்கு அகற்றி
அழகு படுத்தி
மழலையில்
மனம் மகிழ்ந்து
கண்ணூறு
கழிக்கும்
கவலையில்
உளம் நொந்து
அனுதினமும்
அடிமை தொழில் ஏற்
எமை அன்று முதல்
இன்று வரை காக்க
இறைவனை
இறைஞ்சும்
ஒரே
ஜீவன்
அன்பின் சிகரம்
அம்மா.

Thursday, January 5, 2012

கடல்

தமிழ் இலக்கியத்தில்
கடலினை, கடல் அரசன்
என ஆண் பாலாகவும்
பூமியினை, பூமித்தாய்
என பெண் பாலாகவும்
உவமித்து இருப்பதற்கான
காரணம் எதுவாக இருக்கலாம்?

பதில் எதிர்பார்ப்பில்...

1) கடல் எந்த நேரமும் சத்தமிட்டு ஆர்ப்பரித்து கொண்டிருப்பதினால்
2) கடல் அலை பூமிக்கு எப்போதும் அடித்து கொண்டிருப்பதினால்
3)பூமியின் உழைப்புக்களான ஆறுகளினை கடல் தம்வசம் அபகரித்து விடுவதினால்
4)பூமியில் இடையிடையே கடுமையாக பாய்ந்து கடல் தம் கோபத்தினை
வெளிப்
படுத்துவதினால்
5) பிரிந்து செல்வதும், சேர்ந்து கொள்வதுமாய்
பூமியினை கடல் ஏமாற்றிக் கொண்டிருப்பதினால்

குழிகள் காத்திருக்கின்றன

இவ்வுலகின் இறுதி
இருப்பிடம்,

உதிரம் சிந்திய
உழைப்பு
ஈந்த
உடமைகள்,
உரிமை கொண்ட
உறவுகளினால்
உருவப்பட்டு
உடல் மட்டும்
உதாசீனமாய்
எறியப்படும்
குப்பை தொட்டி.

வாசனைகள் இட்டு
போசணங்கள் படைத்து
பயிற்சிகள் செய்து
தூசு கூட
தீண்டா வண்ணம்
கட்டுமஸ்தானமாக
தேற்றிய அழகு
உடல்கள்
புழுக்கள் மெல்ல
பாம்புகள் உண்ண
கறையான்கள் அரிக்க
ஊதிப் பெருத்து
நாற்றமெடுக்க
உருக்குலைந்து
உக்கி மண்ணோடு
மண்ணாக
மண்ணுக்கே
அர்ப்பணமாகும்
கழிவுக் குட்டை.

உடன் பிறப்புகளும்
உதிர பிறப்புகளும்
உடமை மதிப்பீடு
மனக்கணக்கிலிட
உற்ற நண்பர்கள்
தத்தமது கதை பேச
நாற்றமடிக்கும் முன்
முடித்து விடல் நலம்
என உற்றார்
அவசரப்பட
கழிவென
எம்மை
கழிக்கும்
கழிவறை.

மரணம் உன்னை
சந்திக்க முன்
நீ ஒரு முறையாவது
சிந்தி.

காத்திருக்கும்
புதைகுழிகள்
நரக நெருப்பு
குண்டங்களாவதும்
சுவன சோலைகள்
ஆவதும் உம்
கைகளிலேயே
தங்கியுள்ளது.